சாலைப் பயணம் ....
கண்ணுக்கெட்டிய வரை
வழுக்கிசெல்லும் தார்ச்சாலை !!!
கண்ணயர்ந்து விட்டேன்
கதிரவனின் உதயத்தில்
சொர்க்கத்தை பார்ப்பேன் ...
நம்பிக்கையில் !!!
எங்கோ ஒலித்து மறைந்த
பறவையை தேடி கண்கள்
விழித்தபோது விழிகள்
விரிந்தது ......
மலைக்கன்னி மங்கலாய்
புன்னகைத்தாள்...
சுற்றிலும் பார்த்தேன்
பச்சை பட்டாடை எங்கே ?
வெறும் மேடு பள்ளங்களாய்
துயில் கொண்டதில்
துகில் கலைந்தனவோ ???
வெட்கி நான் சிரிக்கையில்
அருகே அமர்ந்தவன் என்னை
பார்த்து சிரித்தான் ....
உன்னை பார்க்க பல மணி நேரங்கள்
பயணிக்க வேண்டுமென !!!!
சட்டென துவண்டு போனேன்
இந்திர லோகம் செல்ல
வருசங்கள் காத்திருக்க
உன்னை காண மணி நேரங்கல்தானே !
"காதலனை பிரிந்து இருக்கும்
நொடிகள் தகித்து கொண்டிருக்கும் "
கவியின் வரிகள் ...
தகித்து நீண்டது என் வழி
மனதின் வெம்மை உனக்கெப்படி
தெரிந்தது ???
சுட்டெரிக்கும் சூரியனை ஏமாற்றி
சில்லிய தென்றலை
எப்படி அனுப்பி வைத்தாய்
என்னை நோக்கி !!!
கூந்தலோடு தென்றல் இட்ட
ஊடலில் சிரித்து மயங்கி
நின்றேன் !!!!
இதோ
நெருங்கியும் விட்டேன்
கற்பனையை தாண்டிய
கலையடி நீ !!!
உன் அபாய வளைவுகள்
ஒவ்வன்றும் அதிர செய்ததடி
இத்தனை அழகிய வளைவுகளை
இறைவன் எத்தனை யுகங்களாய்
செதுக்கினான் என்று !!!
எண்ணியவாறு என்னையும் பார்த்து
புன்னகைத்து கொண்டேன் ..
எத்தனை வினாக்கள் என்னிடம் !!!
எந்த கவிஞன் உளறினான்
"சந்தனம் குழைத்து தந்தத்தில்
செய்த சிற்பம் அவள் மேனி "
பெண்ணை ரசிக்க தெரிந்தவனுக்கு
உன்னை ரசிக்க தெரியவில்லையடி !!!
என்னை வரவேற்கவா இத்தனை
உயர்ந்து நிற்கும் உன் அப்சரசுகளை
வரிசையாய் நிற்க வைத்தாய் !!!
ஒவ்வொன்றும் அம்புல்லியை
அரைத்து வார்த்த அச்சுக்கள்-மரகதங்களை
அள்ளி தெளித்து பதித்து வைத்த
பொக்கிஷங்கள் -எவனடி
பெயர் வைத்தான் இவைகளுக்கு
மரங்கள் என்று ???
பூ போட்ட ஜாடியில்
பார்த்து படித்து வளர்த்த
என் வீட்டு ரோஜாக்களை காட்டிலும்
சாலை யோரமாய் வேலியே
இல்லாமல் சிவந்து சிரிக்கும்
உன் ரோஜாக்களுக்கு என்ன ஊட்டினாய்???
உன் பசுநிற மேனிக்கு -
இத்தனை மெல்லிய
வெண்ணிற ஆடை எங்கடி நெய்தாய் ???
என் இதயம் ஊடுருவி சில
கணங்கள் இழக்க செய்த
அந்திமழை யை எங்கிருந்து
இரவல் வாங்கினாய் ????
தென்றல் தான் உன்னவரா
மேக உடையை களைத்து
ரசித்து நின்றாலும் சிவந்து
தாவி தழுவிக் கொள்கிறாய் ...
எந்த நொடியில் என்னை
இன மாற்றம் செய்தாய்???
அடி எடுத்து வைத்த போது
பெண்ணே பெண்ணை ரசிக்கவைத்து ...
முடி பார்க்கும் போது
காதலனாய் என்னை மாற்றி
தீயினில் ஏனடி கருக செய்தாய் ???
இரண்டு
கண்கள் போதவில்லை
வனங்களின் வனப்பு காண
கைகள் இரண்டும்
வளரவில்லை
வளைத்து அணைத்துக்கொள்ள
உயரம் கூட
உயரவில்லை உன்
முடி கோதி இதழ்
பதிக்க
வினாக்களுக்கு விடை தேடி
அயர்ச்சியில் நின்றபோது
அந்தி சாய்ந்து விட்டது
உன்னிட மிருந்து என்னை
பிரித்துக்கொண்டேன் ....
கையில் கருவுற்றிக்கும்
கைபேசி கதறாமல் ....
கை கால்களை முடமாக்கும்
வாகனம் இல்லாமல் ...
புத்திக்கு போதை ஊட்டி
சமாதி கட்டும் தொலைக்காட்சி
அலறாமல் ....
தாயின் கருவறையை
நினைவூட்டிய நிசப்தம் ....
அந்த மணத்தை
மீண்டுமோர் முறை
நாசிக்குள் புகுத்தி சென்ற
காற்றின் வேகம் ....
உன்னை காணாதவரை
என்னை சுற்றிலும் காதல்
வெறும் உணர்வு -இன்றோ
வெற்றி கொண்ட உலகம்
ஐயோ!-
வேண்டுமடி எனக்கு
இந்த காதல் போதை !!!
நினைக்கையில் நித்திரை ஏனோ
நிழலாட மறுக்கின்றது !!!
இன்னுமோர் நொடி தாமதித்து
நின்றிருந்தால் புதைந்து
போயிருப்பேன் உன்னுள்ளே !!!
இந்த சொர்க்கம் காண
எத்தனை நரகமும்
தாண்டி உயிர்த்து வருவேன் !!!
இயந்திரம் முன்னே
இயந்திரமாய் அமர்ந்து
புரியாத மொழியில்
புதைந்து போவது கூட
நாளை உன் வளைவுகளில்
தழுவி இருக்கும் மேக உடையில்
புதைத்து கொள்ள ....
How to make Redmine boot with Windows..
15 years ago

No comments:
Post a Comment